யோசியா ஆலயத்தை பழுதுபார்த்து மக்களை
சுத்திகரித்தல்
யோசியாவின் கொள்ளுத்தாத்தாவாக்கிய
எசேக்கியா அரசன் கர்த்தருக்கு பிரியமான வழியில் நடந்து அந்நிய கடவுள்களின்
பலிபீடங்களை அகற்றி தேவனுக்கு பயந்து வாழ்ந்தவர். அவருடைய நாட்களில் எருசலேமில்
சாலொமோன் கட்டிய தேவாலயத்தை பழுதுபார்க்கும் பணியை துவங்கினார். ஆனால் அவருக்கு
பின் அவரது மரபுவழியில் வந்த மனாசெயும், ஆமோனும் அந்த பணியை தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டனர்.
இப்படியாக ஆலயம் பழுதுபார்க்கும் பணியானது சுமார் 75 வருடங்களுக்கும்
மேலாக கிடப்பில் கிடந்தது.
தனது 24-வயதில் தேசம் முழுவதிலும்
இருந்து அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை தகர்த்து தேசத்தை சுத்திகரித்த பின், அடுத்த பணியாக எருசலேமின்
தேவாலயத்தை பழுதுபார்க்க தொடங்குகிறார். ஆலய பழுது பார்த்துகொண்டிருக்கும் போது
இலக்கியா என்னும் ஆசாரியன் கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை கண்டெடுத்தார்.
யோசியா அரசனின் செயல் காரனாகிய சாப்பான் கையில் அதைக்கொடுத்தார். சாப்பான் யோசியா
அரசனிடம் சென்று, “ ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக்
கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை
வாசித்தான். (II நாளாகமம் 34:14-18).
அது என்னெவென்றால் “இஸ்ரவேல் ஜனங்கள்
என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம்
உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம்
அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார். சகல
சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும்
வரப்பண்ணுவேன்”. இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை யோசியா ராஜா
கேட்டபோது, தன் இருதயம் இளகி, தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி, அவருக்கு முன்பாகப் பணிந்து, தன் வஸ்திரங்களைக்
கிழித்துக்கொண்டு, கர்த்தருக்கு முன்பாக அழுதார். (II நாளாகமம் 34:24-27).
ஆடையை கிழித்து தாழ விழுந்து கதறி அழுவது
அந்த நாட்களில் ஒருவருடைய அதீத துக்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. யோசுவா (7:6), தாவீது (2சாமு13:31), யோபு (1:20) போன்றவர்கள் அதே போல அழுது கர்த்தரிடம் மன்றாடி
ஜெபித்தபொழுது கர்த்தரும் அவர்களுடைய ஜெபத்தை கேட்டு அவர்களுக்கு
மனமிரன்ங்குகிறவராகவே இருந்தார். அதேபோலவே யோசியா ஆடையை கிழித்து கதறி அழுது தன்
மக்களுக்காக மன்றாடின பொழுது கர்த்தர் யோசியாவிற்கு மனமிரங்கினார். “நீ உயிரோடிருக்கும் நாளிலே
உன் கண்கள் இந்த இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எந்த
பொல்லாப்பையும் காண்பதில்லை” என்று “உல்தாள்” தீர்க்கதரியானவள் மூலம் வாக்குறுதி அளித்தார்.
அப்பொழுது யோசியா ராஜா, ஆசாரியர், லேவியர், மூப்பர், பெரியோர், சிறியோர் என எல்லா
ஜனங்களையும் தேவாலயத்திற்கு கூடிவர செய்து, அவர்க்களுடைய காதுகள் கேட்க்கும் படியாய், “தன் முழுஇருதயத்தோடும் தன்
முழு ஆத்துமாவோடும் தேவனுடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய
கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன்” என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினார் (II நாளாகமம் 34:31). மேலும் எல்லா ஜனங்களையும் அதே போல உடன்படிக்கை (Agreement) செய்யவைத்தார்.
யோசியா முதலாவது தேசத்தை சுத்திகரித்தார்.
தேவனுக்காக வாழும் வைராக்கியமும், தன்னுடைய அதிகார பெலமும் இதை செய்ய வைத்தது. ஆனால்
தேசத்தின் ஜனங்களை சுத்திகரிக்க அவர் செய்ததெல்லாம் ஆடையை கிழித்து கதறி அழுது
ஜெபித்த மன்றாட்டு ஜெபமே. இன்றைக்கு அநேகரிடம் தேவனுக்காய் வாழும் வைராக்கியம்
இருக்கும். ஆனால் மன்றாட்டு ஜெபம் இருப்பதில்லை.
மன்றாடுவது என்பது, ஒரு காரியத்திற்காக மிகவும்; இரந்து, கெஞ்சிக்கேட்பதைக்
குறிக்கும். நமது உள்ளத்தில் அதிகம் விசாரங்கள் பெருகுகையில் நாம் தேவனின் சமுகம்
சென்று, மன்றாடி ஜெபிப்பதுஉண்டு. மோசே, தேவனிடம் சென்று இஸ்ரவேல்
ஜனங்களின் பாவத்தை அவர்களுக்கு மன்னிக்கும்படியாக மன்றாடுவதைக் காண்கிறோம். இந்த
மன்றாட்டு ஜெபம் வெறும் வார்த்தைகளாகவோ அல்லது கடமைக்காகவோ செய்யப்பட்ட ஒன்றல்ல.
மோசே ஜெபித்த விதத்திலிருந்து அது அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த ஒரு
மன்றாட்டு ஜெபம் என்பதை விளங்கிக்கொள்ளலாம். “இந்த ஜனங்களை
மன்னிக்கக்கூடுமானால் மன்னியும், இல்லாவிட்டால் என் பேரை ஜீவ புஸ்தகத்திலிருந்து
கிறுக்கிப்போடும்” (யாத்திராகமம் 32:32) என அவர் ஜெபித்தார். அதாவது தான் தண்டிக்கப்பட்டாலும்
பரவாயில்லை; தனது ஜனங்கள் மன்னிப்படையவேண்டும் என்பதே ஜெபம்.
ஜனங்களுக்காக மன்றாடி எப்படியாவது தேவனுடைய கோபாக்கினையில் இருந்து அவர்களைத்
தப்புவிக்கவேண்டும் என்பதே மோசேயின் ஜெபத்தின் நோக்கமாய் இருந்தது.
24 வயதே
நிரம்பிய யோசியாவினால் தேசத்தையும், அதின்
ஜனங்களையும் பாவத்திலிருந்து விளக்கி பரிசுத்தவழியில் நடத்தியது அவரிடமிருந்த
தேவனுக்காய் வாழும் வைராக்கியமும், மக்களுக்காக
ஜெபித்த மன்றாட்டு ஜெபமுமே. நாமும் தேவனுக்காய் வைராகியமாய் வாழ்ந்து, தேசத்தின்
ஜனங்களின் இரட்சிபிர்க்காக மன்றாடி ஜெபித்தால் நிச்சயம் கர்த்தர் நம்மைக்கொண்டும்
பெரிய காரியங்களை செய்வார்.
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
0 Response to " அரசர். யோசியா – பாகம் 2 "
Post a Comment