விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் ஐயர் (1790 - 1838)

நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் ஐயர் (1790 - 1838)

திருச்சபை வரலாற்றில் சிறப்பும், புகழும் பெற்ற திருநெல்வேலி திருச்சபை இன்று தென் இந்திய திருச்சபையின் ஒரு மாபெரும் பேராயமாக விளங்குகிறது. இத்திருச்சபைக்கு வித்திட்டு வளர்ந்த பெருமை மேற்கு நாட்டு நற்செய்தி சங்கங்களான CMS (Church Missionary Society), SPG (Society for the Propagation of the Gospel), SPCK (Society for Promoting Christian Knowledge) யும், அவைகள் அனுப்பிய மிஷனெரிகளையும் சாரும். அவ்வாறு ‘சர்ச் மிஷன் சங்கம்’ (C M S) சார்பில் 1814ஆம் ஆண்டு, ஜூலை 4ஆம் தேதியில் இந்தியாவுக்கு மிஷனரியாக வந்தவர் தான் “சார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்” என்பவர். இவர் நவம்பர் 5, 1790 ஆம் நாள் ஜெர்மனியில் உள்ள கிரான்டன்ஸ் (Graudens) என்னுமிடத்தில் பிறந்தார்.

ரேனியஸ் 6 வயதாயிருக்கும் போது தந்தை நிக்கலஸ் ரேனியஸ் இறந்து போனார். தாயார் பெயர் காத்தரின் டாரதி. ரேனியசோடு பிறந்தவர்கள் இரு சகோதரிகளும், இரு சகோதரர்களுமாவர். ரேனியஸ் 14 வயது வரை மரியன் வெர்டர் நகரிலிருந்த கதீட்ரல் பள்ளியில் கல்வி கற்றார். பின்பு 3 ஆண்டுகள் ‘பாஸ்கா’ என்ற ஊரிலிருந்த அவரது மாமாவிடம் எழுத்தாளராகப் பணிபுரிந்தார். அதன் பின்பு 1807ஆம் ஆண்டு அவருடைய பெரியப்பாவின் நிலபுலன்களைக் கவனித்துக் கொள்ளும் பணிகளைச் செய்து வந்தார். அவர் தங்கியிருந்த பெரியப்பாவின் வீட்டில் அநேக மிஷனரி புஸ்தகங்கள் இருந்தன. எழுத்தாளரான ரேனியஸ் அதை வாசித்த பின்பு கிறித்தவ மிஷனரி ஊழியத்தில் ஆர்வங்கொண்டு, அதற்காகத் தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள பெர்லின் (Berlin) சென்றார். அங்கு 15 மாதங்கள் இறையியல் கல்வி பயின்று 1812 ல் குரு பட்டம் பெற்றார். 1814ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து தரங்கம்பாடியில் சிறிது காலம் தங்கி தமிழ் பயின்றார். பின்னர் சென்னை சென்று “அனி வேன் சாமரன்” (Annie Van Someran) என்ற டச்சு நாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அங்கும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளைக் கற்றார். பின்னர் சென்னையிலிருந்து 1820, ஜூலை 7ஆம் தேதி, திருநெல்வேலிக்கு சென்று 18 வருடங்கள் பணியாற்றினார். “1820 முதல் 1835 வரை ரேனியஸின் வாழ்க்கை வரலாறே திருநெல்வேலி திருச்சபையின் வரலாறாகும்” என மறைதிரு. டி. ஏ. கிறிஸ்துதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலியில் கிறித்தவ சமூகப் பணி :-
தென் இந்திய திருச்சபை வரலாற்றில் திருநெல்வேலி அப்போஸ்தலன் என போற்றப்பட்டு வரும் ரேனியஸ் ஐயரவர்கள் 7.7.1820 ம் ஆண்டு பாளையங்கோட்டை வந்து 15 ஆண்டுகள் அல்லும் பகலும் அயராது உழைத்து திருநெல்வேலி மாவட்டத்தில் 371 சபைகளை உருவாக்கினார். பாளையங்கோட்டையை மையமாக வைத்து, ரேனியஸ் ஐயர் அவர்கள் பல கிராமங்களுக்குச் சென்று புதிய சபைகளை ஏற்படுத்தினார். சாத்தான்குளம், நெடுவிளை, மெஞ்ஞானபுரம், இடையன்குளம், ஆசீர்வாதபுரம், நல்லூர், சுரண்டை, புலிக்குறிச்சி என்ற இடத்தில் புதிய சபையை உருவாக்கி டோனாவூர் என்று பெயரிட்டு மற்றும் அநேக புதிய சபைகளை உண்டாக்கினார். ரேனியஸ் ஐயரவர்கள் திருச்சபையை உருவாக்கியதோடு, பள்ளிகளையும் ஆரம்பித்து கல்விப் பணியையும் சிறப்பாகச் செய்தார். 5 ஆண்டுகளுக்குள் அவர் 107 ஆரம்பப் பள்ளிகளை ஆரம்பித்து, பிள்ளைகள் வாசிக்கவும் தங்கள் தாய் மொழியிலேயே வேதத்தைக் கற்றுக் கொள்ளவும் வழிவகுத்தார். 1825 –ம் வருடத்தில் மட்டும் 3000 க்கும் மேற்ப்பட்டோர் 90 கிராமங்களில் கிரிச்த்துவை ஏற்றுக்கொண்டனர்.

1820 ஆம் வருடத்தில் திருநெல்வேலி திருச்சபையில் சாதிமதப் பழக்கங்கள் அதிகளவில் காணப்பட்டது. ஆனால் ரேனியஸ் இந்தப் பாகுபாடுகளை அனுமதிக்கவில்லை. பள்ளி, ஆலயம், மாணவர் தங்கும் விடுதிகளிலும் அனைத்து மாணவர்களும் சரிசமமாக நடத்தப்படல் வேண்டும் என்பதில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். மேலும் தமிழிலேயே பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் மாணவர்களுக்கான பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். பல பாடசாலைகளைத் தோற்றுவித்தார். இது போல் ஆண்களைப் போல் பெண்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பெண்களுக்கும் பாடசாலைகளை உருவாக்கினார். முதன் முறையாக எல்லா சமூகத்தை சேர்த்தவர்கலையும் ஆசிரியர்களாகவும், உபதேசியார்களாகவும் நியமிக்கத் தொடங்கினார். இதனால் ரேனியஸ் அநேக தொல்லைகளுக்கு ஆளாக நேரிட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கிறித்தவ சமயப் பணியில் இவர் ஆற்றிய தொண்டு அளவிடற்கரியது. இதனால் இவரை ‘திருநெல்வேலி அப்போஸ்தலர்’ (The Apostle of Tirunelveli) என்று அழைக்கப் பட்டார். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, முருகன்குறிச்சியில், கதீட்ரல் ஆலயம் (Cathedral Church) இருக்கும் இடத்தில் 1826முதன் முதலில் ஒரு சிறு ஆலயத்தை பொது மக்கள் வழிபாட்டிற்காகத் கட்டினார். அது இன்று தூய திரித்துவப் பேராலயம் எனப்படும் ஊசிக்கோபுரம் (Holy Trinity Cathedral) ஆக சிறப்பு பெற்றுள்ளது. இதன் அருகில் பெண்களுக்கென்று ஒரு பள்ளிக்கூடத்தை நீறுவினார். அது இன்று ‘மேரி சார்ஜென்ட் மேல்நிலைப் பள்ளியாக’ உயர்ந்துள்ளது . அதுபோல் உபதேசியார்களும், ஆசிரியர்களும் கற்பதற்கு ஒரு போதனாப் பள்ளியைத் தொடங்கினார். அது இன்று ‘பிஷப் சார்ஜென்ட் போதனாப் பள்ளி’ எனும் பெயரில் அமைந்துள்ளது.

உயர் சாதியினரால் இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து புதிதாக மதம் மாறிய கிறித்தவர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பல கிறித்தவ கிராமங்கள் ரேனியஸ் காலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றில் நல்லூர், மெய்யூர், சமாதானபுரம், முதலூர், அடைக்கலாபுரம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.1827ல் புலியூர்க்குறிச்சி எனும் கிராமத்தைஜெர்மனியிலிருந்த “டோனா பிரபு” என்பவரின் நிதியுதவியோடு ரேனியஸ் விலைக்கு வாங்கி அங்கு கிறிஸ்தவர்களைக் குடியேற்றினார். அந்த ஊர் “டோனாவூர்” என்று பெயர் பெற்றது.

திருச்சபையில் சங்கங்கள் :-
ரேனியஸ் சென்னையிலிருந்த போது 1818 ல், “துண்டுப் பிரசுரம் மற்றும் சமய நூல்கள் சங்கம்” (Madras Tract and Religious Book Society) என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இந்த அமைப்பு பின்னாளில் “கிறிஸ்தவ இலக்கிய சங்கத்துடன்” (Christian Literary Society) இணைக்கப்பட்டு விட்டது. திருநெல்வேலியிலும் “துண்டுப் பிரசுர சங்கத்தை ”நிறுவினார். லண்டனிலிருந்து கொண்டு வரப்பட்ட தாளில்,துண்டுப் பிரசுரங்களை ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வினியோகம் செய்தார். இதனால் கிறிஸ்தவ சமய அறிவும், சாதாரண மக்களின் எழுத்தறிவும் வளரலாயிற்று.“தரும சங்கம்” என்ற பெயரால் ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் பாடசாலைகள், வீடுகள்,கோவில்கள் கட்டுவதற்கு நிலம் வாங்கிக் கொடுத்தார்.

“விதவைகளின் ஆதரிப்புச் சங்கம்” நிறுவி, அதன் மூலம் உபதேசியாரின் விதவைகளுக்கு ஜீவனாம்சம் கொடுத்துவர ஏற்பாடு செய்தார்.கிறிஸ்தவர்களாய் மதம் மாறிய சில இந்து குடும்பத்தினர் அவர்களுடைய பழக்கத்தின் காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் குரங்கணி கொடை விழாவில் கலந்து கொள்வதை தடுப்பதற்காக பாளையங்கோட்டையில் , 1834 ஆம் ஆண்டு சூலை 9 அன்று மாம்பழச் சங்கத்தை ஆரம்பித்தார். இதன் மூலம் திருமண்டலத்தில் அனைத்து சபைகளையும் ஒருங்கிணைக்கின்ற தோத்திரப் பண்டிகையாக வருடந்தோறும் பாளையங் கோட்டை, நூற்றாண்டு மண்டபத்தில் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆலய வளர்ச்சிக்காகச் சபை மக்கள் “ஒருநாள் வருமானக் காணிக்கைப் படைத்தல்”,“ஆலய பரிபாலன நிதித் திட்டம்” (Local Church Fund), “கைப்பிடி அரிசி காணிக்கை” போன்ற திட்டங்களை ரேனியஸ் ஐயர் அறிமுகப்படுத்தினார்.இத்திட்டங்கள் இன்றும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ரேனியஸ் ஐயரின் தமிழ்ப் பணி :-
வெளிநாடுகளில் இருந்து வந்து தமிழ் கற்றுக்கொண்டு தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றிய அறிஞர்களும் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் அபார தமிழ் ஆற்றலால் நம்மை பிரமிக்க வைக்கிறார்கள். இத்தாலி நாட்டு பெஸ்கி, தமிழகம் வந்து தமிழை பழுதற கற்றுக்கொண்டு கீர்த்தனைகள் படைத்து வீரமாமுனிவர் ஆனார். திராவிட மொழியில் ஒப்பிலக்கணம் படைத்த கால்டுவெல் அயர்லாந்து நாட்டவர். ஆங்கிலேய நாட்டவரான டாக்டர் ஜி.யூ.போப் தமிழகம் வந்து தமிழில் புலமை பெற்று உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். ரஷியாவில் பிறந்து தமிழ்மண்ணில் ‘வேத உதாரணத் திரட்டு’ நூலை எழுதி புகழ் பெற்ற ரேனியஸ் ஐயர் இப்படி பலரும் தங்கள் தேசம் மறந்து தமிழாக வாழ்ந்தார்கள் என்பதை உணர்வுபூர்வமாக விவரிக்கும் நூல்.

ரேனியஸ் ஐயர் சென்னையில் முகவை இராமானுஜக் கவிராயரிடம் தமிழில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களை முறையாகக் கற்றுத் தெளிந்தார். பின்பு திருப்பாற்கடல்நாதன் கவிராயர் என்னும் தமிழ் அறிஞரிடம் 14 வருடங்கள் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். இயல்பாகவே இனிமையாகப் பேசக் கூடிய இவர் தமிழையும் சிறப்பாகப் பேசக்கூடியவரானார்.இவருடைய சொற்பொழிவுகளை இந்துக்களும் இரசித்துக் கேட்டார்கள். இவர் பல தமிழ் நூல்களை எழுதியிருக்கிறார். இவர் கிறித்தவ சமயப் பணியுடன் தமிழ் இலக்கியப் பங்களிப்பும் செய்தவர்.

“உயர்ந்த கருத்துக்களைத் தெளிந்த நடையில் உணர்த்தும் திறன் ரேனியசிடம் அமைந்திருந்தது. அவர் தம் நூல்களில் அழகுண்டு, இனிமையுண்டு, நிரந்துரைக்கும் நீர்மையுண்டு; வகுத்தும் தொகுத்தும் உரைக்கும் வனப்பும் உண்டு“ என்று ரேனியஸ் ஐயரின் தமிழைப் பற்றி சேதுப்பிள்ளை கூறியிருக்கிறார்.

ரேனியஸ் ஐயரின் இறுதி நாட்கள் :-
இங்கிலாந்து திருச்சபையில், தான் குறைபாடுகளாகக் கருதியவற்றை ரேனியஸ் ஒரு நூலின் மதிப்புரைக்காக எழுதினார். ஏனெனில் அவரின் நாட்களில் சாதி அமைப்பு சபைகளுக்குள் இருந்ததை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திருச்சபையினாரல் பல எதிர்ப்புகளுக்கு ஆளான ரேனியஸ் ஐயர் 1835 ஆம் வருடம் ‘சர்ச் மிஷன் சங்கம்’ (Church Mission Society) –திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். கிறிஸ்துவின் ஊழியத்திற்கு தம்மை அழைத்த கிறிஸ்த்துவிற்கு ஊழியம் செய்வதை அவர் நிறுத்தவில்லை. ரேனியசும் அவரைச் சார்ந்தவர்களும் ஆற்காடு சென்று அங்கே ஒரு புதிய அமைப்பை நிறுவி ஊழியம் செய்து வந்தனர். திருநெல்வேலியிலிருந்த உபதேசியரும், மக்களும் அவரை வேண்டிக் கொண்டதன்படி, ரேனியஸ் அவருடைய ஆதரவாளர்களுடன் மீண்டும் திருநெல்வேலி திரும்பினார். திருநெல்வேலி சிந்துபூந்துறையில் “யாத்ரிகர் சங்கம்” என்ற சுவிசேஷ சங்கத்தை நிறுவி, சுவிசேஷத்தைக் கிராமங்களில் பரப்பினர். பின்னர் வழிபாட்டிற்காக அடைக்கலாபுரத்தில் ஒரு ஜெபக்கூடம் கட்டப்பட்டது. அந்த ஜெபக் கூடம் தூய. யோவான் ஆலயம் என்று பெயர் பெற்றது. இன்று அது “சின்னக் கோயில்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது.

“பவுல் அப்போஸ்தலனுக்குப் பிறகு தோன்றிய மிகப் பெரிய மிஷனரி ரேனியஸ் ஐயர்” என்று யூத மிஷனரி டாக்டர். உல்ப் (Dr. Wolf) என்பவர் தெரிவிக்கும் அளவிற்கு நெல்லை மாவட்டத்தில் பல 371 கிறித்தவ சபைகளையும், தமிழ் கல்வியறிவு பெறவேண்டுமென்பதற்காக 107 பள்ளிகளையும் ஆரம்பித்தார். ரேனியஸ் ஐயரின் அர்ப்பணிப்பு, தன்னலமற்ற தியாகமான வாழ்க்கை கடவுளின் மேல் வைத்த அன்பு, மக்கள் மீது காண்பித்த பாசம் யாவும் காலத்தால் அழியா சின்னங்களாக இன்றைக்கும் நெல்லை மக்களின் இருதயத்தில் வாழ்ந்து வருகிறார். சாதீயப்பாகுபாடுகளைப் போக்கி சமத்துவக் குடியிருப்புகளை உருவாக்கியதுடன் பெண்கள் கல்விக்கு முன்னின்று பள்ளிகளைத் தொடங்கியவர். சமூகத்திற்கு உதவும் பல சங்கங்களைத் தோற்றுவித்த ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.
திருச்சபையில் நிலவி வந்த பிரிவினைகள் ரேனியஸ் ஐயருக்கு மனஅழுத்தத்தை கொடுத்தமையால் அவரது உடல் நிலை பாதிக்கதொடங்கியது. 1835 – லிருந்து சபையின் பிரிவினைகளுக்கு மத்தியில் போராடிய ரேனியஸ் ஐயர் 1838 ஆம் ஆண்டு, ஜூன் 5 அன்று மரணமடைந்தார். அவருடைய உடல் அடைக்கலாபுரம், தூய. யோவான் ஆலயக் கல்லறைத் தோட்டத்திற்கு வெளியே ஊரின் நடுவில் அடக்கம் செய்யப்பட்டது.

விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்
★☆★ ✔ Like ✔ Tag ✔ Share ☆★☆
To Listen our songs http://www.youtube.com/davidi4u
For daily messages https://www.facebook.com/VVsong

0 Response to " நெல்லை அப்போஸ்தலன் ரேனியஸ் ஐயர் (1790 - 1838) "

Post a Comment